-
—-
நான் பட்ட கஷ்டம், என் பிள்ளைகளும் படக்கூடாது’
எனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும்
குடும்பத்துக்காகவும், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகவும்
அர்ப்பணிப்பவரே தந்தை.
-
அனைவரின் முதல் ரோல் மாடலும், முதல் ஹீரோவுமான
அந்த தந்தையை போற்றும் வகையில் அவர்களுக்கு
மரியாதை செலுத்தும் தினமாக ஆண்டுதோறும் தந்தையர்
தினம் கொண்டாடப்படுகிறது.
-
ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர்
தினமாக கொண்டாடும் வழக்கம் இந்தியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
-
எப்படி தோன்றியது?:
-
கடந்த 1862ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ வீரராக
இருந்தவர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்.
இவர் வாஷிங்டன் அருகே உள்ள ஸ்போகேனே என்ற
நகரில் மனைவி எல்லன் விக்டோரியா சீக் ஸ்மார்ட்டுடன்
வசித்து வந்தார்.
-
இந்த தம்பதியின் முதல் குழந்தையாக மகள்
சொனாரா ஸ்மார்ட் டோட் 1882ல் பிறந்தார். சொனாராவுக்கு
16 வயதாகும் போது, எல்லன் 6வது முறையாக கர்ப்பமடைந்து
ஆண் குழந்தையை பிரசவித்து இறந்து போனார்.
-
பிறந்த குழந்தையுடன், 4 மகன்களையும், மகள் சொனாரா
என 6 பிள்ளைகளையும் தனி ஆளாக போராடி காப்பாற்றுவதை
தனது வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றார் வில்லியம் ஜாக்சன்.
அதனால் மறுமணம்கூட செய்து கொள்ளாமல் குழந்தைகளை
பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தினார். கைக்குழந்தையை
வைத்துக் கொண்டு தந்தை படும் சிரமங்களை நேரில் பார்த்து
வளர்ந்த மகள் சொனாராவுக்கு தந்தையின் மீது அளவு கடந்த
பாசமும் மரியாதையும் ஏற்பட்டது.
-
இந்நிலையில், 1909ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னையர்
தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த சொனாரா,
தனது தந்தை போன்றவர்களின் தியாகத்தை போற்றும்
வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என
1910ம் ஆண்டில் கோரிக்கை விடுத்தார்.
-
தனது தந்தையின் பிறந்த நாளான ஜூன் 5ம் தேதி கொண்டாட
தேவாலயத்தில் அனுமதி கோரினார். ஆனால், ஏற்பாடுகளை
செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால்,
முதல் தந்தையர் தினம் ஜூன் 19, 1910ம் ஆண்டில் ஸ்போகேனே
நகரில் கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும்,
ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர்
தினமாக கொண்டாடி அதை பிரபலப்படுத்தி வந்தார் சொனாரா.
-
நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென
கருதிய சொனாரா இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அவரின் கோரிக்கை நிறைவேற 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3வது
ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினம் என அறிவிக்கலாம்
என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார்.
-
அதற்கு 6 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற
அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில்
தந்தையர் தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.
-
இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள்
தந்தையர் தினம் என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை
சொனாராவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்
தருவதே இத்தினத்தின் நோக்கம். எனவே இந்த நன்னாளில்
உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட
கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை
செய்யுங்கள்.
–
———————————-
நன்றி- தினகரன்
இன்று தந்தையர் தினம்: தந்தையை போற்றுவோம்
Aucun commentaire:
Enregistrer un commentaire