jeudi 28 mai 2015

அகதி!

என் நாட்டில் எனக்கு இடமில்லை.
குண்டுகளும் நின்ற பாடில்லை!
குயில் தோப்புகள் இருந்த இடமெல்லாம்
சிலர் மயிற்பீலியெனவே நினைத்திடலாம்!

அன்றிருந்தது எங்கள் சிறுவீடு.
இரண்டே சிறிய அறைகளோடு!
தாத்தாவின் படுக்கை வெளியில் தான்!
திருடர்கள் என எவரும் இல்லை தான்!

நாளெல்லாம் உழைத்தால் வருடத்தில்
அனைவர்க்கும் புதுத் துணி எடுத்திடலாம்!
தேவைகள் குறைந்த எம் இல்லத்தில்
இன்பம் குறைந்ததில்லை எனலாம்!

போர் வந்திட சிதைந்தது எல்லாமும்!
தாத்தா காணாமல் போனார் முதலில்.
யார் யாரோ வந்தார்கள் தினமும்
ஒளிந்திருந்தோர் வெளிவந்தோம் இரவில்.

கரிநாளொன்றில் எம் இல்லத்தின் மேல்
குண்டுகள் பல விழுந்தன என்றார்கள்!
வெகுநாள் கழிந்தே என் உள்ளத்தில்
உணர்ந்தேன்! பெற்றோர் வர மாட்டார்கள்!

பலவிடம் சென்றேன்; அடி பட்டேன்!
எழுதிட முடியாத் துயர் அனுபவித்தேன்!
ஒருவழியாய் கள்ள வழி ஒன்றில்
என் நாட்டை நீங்கி இங்கு வந்தேன்!

இரண்டாம் தரக் குடிமகனாகத் தான்
எப்போதும் இங்கு இருக்கின்றேன்!
ஒரு நாள் வரும்! அன்றே திரும்பிடுவேன்!
என் தாய்மண்ணில் தான் உறங்கிடுவேன்!



அகதி!

Aucun commentaire:

Enregistrer un commentaire